குவாலியர்: ‘ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப கொண்டு வரும் என்று நான் சொல்லவே இல்லை,’ என்று ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் தோமர் விளக்கம் அளித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், ‘வேளாண் சட்டங்கள் ரத்து விவகாரத்தில் ஒரு அடி பின்வாங்கி இருக்கிறோம். மீண்டும் அதில் முன்னே்றி செல்வோம்,’ என, இந்த சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டார். இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ‘5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலுக்கு பின், 3 கருப்பு சட்டங்களையும் ஒன்றிய அரசு வேறு வடிவில் மீணவுடும் கொண்டு வரும் என்பது இதன்மூலம் தெளிவாகி உள்ளது,’ என்றார். ‘வேளாண் சட்டங்களை ரத்து செய்து, பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டதை அமைச்சர் தோமர் அவமதித்து விட்டார்,’ என ராகுல் காந்தி விமர்சித்தார். இந்நிலையில், அமைச்சர் தோமர் நேற்று அளித்துள்ள விளக்கத்தில், “ஒன்றிய அரசு நல்ல (வேளாண்) சட்டங்களை கொண்டு வந்துள்ளது. சில காரணங்களுக்காக அதனை திரும்ப பெற்றோம். அரசு தொடர்ந்து விவசாயிகளின் நலனுக்காக பாடுபடும் என்றுதான் கூறினேன். ரத்து செய்யப்பட்ட வேளாண் சட்டங்களை மீண்டும் கொண்டு வரப்படும் என்று நான் சொல்லவே இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.