×

ரயிலில் பாய்ந்து எஸ்ஐ தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் மாடர்ன் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (51). இவர் விருதுநகர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பானுமதி. சிவகாசியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. மகன் கல்லூரியில் முதலாமாண்டும், மகள் 11ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் காவல்துறையில் பணிபுரிவதால் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என தன்னுடன் பணிபுரிந்தவர்களிடம் கூறி ராதாகிருஷ்ணன் புலம்பி வந்துள்ளார்.

நேற்று காலை வழக்கம் போல பணிக்கு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதற்கிடையே, நேற்று இரவு 10 மணி அளவில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக நெல்லை எக்ஸ்பிரஸ் இன்ஜின் டிரைவர் விருதுநகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அந்த இடம் தூத்துக்குடி ரயில்வே காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தற்கொலை செய்து கொண்டது சிறப்பு சார்பு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. ராதிகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : SI , SI commits suicide by jumping on train
× RELATED ‘பெங்களூரு குண்டு வெடிப்புக்கும் எஸ்.ஐ.வில்சன் கொலைக்கும் தொடர்பில்லை’