ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 25 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகளால் பயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் இரவு- பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா வனப்பகுதியிலிருந்து ஜவுளகிரி பகுதிக்கு 50க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அங்கிருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு 25 யானைகள் சென்ற நிலையில், மேலும் 25 யானைகள் ஓசூர் வனப்பகுதியான சானமாவு காட்டில் முகாமிட்டுள்ளன. யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளதால், அவற்றால் உயிர்சேதம் மற்றும் பயிர்சேதம் ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வேட்டை தடுப்பு பிரிவினர் மற்றும் வனத்துறையினர் 40 பேர் இணைந்து, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இரவு, பகலாக காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஓசூர் பகுதியில் காலை 9 மணிவரை எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவுவதால், அவர்கள் இரவு நேரங்களில் ஆங்காங்கே தீ மூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.