பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் டிசம்பர் 28 முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில் இன்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், நிபுணர்கள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு இருந்தனர்.
அப்போது கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கொரோனா பரவுவதற்கு வாய்ப்புள்ளதால் வருகிற 28-ஆம் தேதியில் இருந்து 10 நாட்கள் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 28-ஆம் தேதி இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். கர்நாடக அரசின் இந்த உத்தரவு காரணமாக பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.