×

தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கோலாகல கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை; கேக் வழங்கி உற்சாகம்

சென்னை: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஒருவருக்கொருவர் கேக் கொடுத்து உற்சாகமாக வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் 10 நாட்களுக்கு முன்பே களைகட்டி விட்டது. வீடுகள், தேவாலயங்கள்,  மின்விளக்குகள், ஒளிரும் நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டன. வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டது.

சென்னை நகரில் நேற்றுமுன்தினம் முதலே ஏராளமானோர் சாலைகளில் கூடி ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துகொண்டனர். சான்டா கிளாஸ் வேடமணிந்தவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் வலம்வந்து பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கும் நேரமான நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு ஏராளாமானோர் ஒளிரும் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனைக்கு வந்தவர்களை கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் வரவேற்றனர். பிரார்த்தனையில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பிரார்த்தனை முடிந்ததை தொடர்ந்து ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு, கேக் வழங்கி மகிழ்ந்தனர். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டியும், புது துணி உடுத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இளம்தலைமுறையினர் சமூகவலைதளங்களிலும் பரவலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். டிஜிட்டல் வாழ்த்து அட்டைகளை சமூக வலைதள குழுக்கள், இமெயில் மூலம் பகிர்ந்து நண்பர்கள், உறவினர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், செயின்ட் தாமஸ் மவுன்ட் ஆலயம், லஸ் பிரகாச மாதா தேவாலயம், அடையாறில் உள்ள இயேசு அன்பர் கிறிஸ்தவ தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், அண்ணாசாலை மேம்பாலத்தில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சென்னையில் பல தேவாலயங்களில் ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள், உணவு வழங்கப்பட்டது.

Tags : Christmas ,Tamil Nadu , Christmas celebrations across Tamil Nadu: special prayers in churches; Excited to serve the cake
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...