சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசால் வெளியிடப்பட்ட ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை குறித்த வழிகாட்டல் அரசாணையின் கீழ் பயன்பெற முடியாத ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைநோய்கள் உள்ள உடல் நலம் குன்றிய சிறைவாசிகள் ஆகியோர்களின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு, அவர்களின் முன்விடுதலைக்கு உரிய பரிந்துரை வழங்க சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் என்.ஆதிநாதன் தலைமையின் கீழ் ஆறுபேர் அடங்கிய ஒரு குழு அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். அதோடு இக்குழுவில் மனித உரிமை தளத்தில் பயணித்த சட்ட வல்லுநர்களையும் தமிழக அரசு இடம்பெறச் செய்து விரைவாக பரிந்துரையைப் பெற்று விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.