துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் யு19 ஆடவர் ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதன் ஏ பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ள நிலையில் நேற்று 2வது ஆட்டத்தில் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா 49ஓவரில் எல்லா விக்கெட்களையும் இழந்து 237ரன் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ஆராத்யா 50, ஹர்னூர் சிங் 46ரன் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஜீஷன் 5 விக்கெட்களை அள்ளினார். தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் கடைசி பந்து வரை வெற்றிக்காக போராடியது. கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில் அகமதுகான் பவுண்டரி விளாச பாகிஸ்தான் 50ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 240ரன் எடுத்தது. அதனால் பாகிஸ்தான் 2விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பெற்றது. அந்த அணியில் முகமது 82, அகமதுகான் 29* ரன் எடுத்தனர். இந்திய வீரர் ராஜ் பவா 4 விக்கெட் வாரினார். இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.