திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (16ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. இந்நிலையில் 41 நாள் நீண்ட மண்டல காலம் இன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக நேற்று மாலை கொண்டு வரப்பட்ட தங்க அங்கி, ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று, பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மண்டல பூஜைக்கு பிறகு, இரவு 10 மணியளவில் நடை சாத்தப்படும். இத்துடன் 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடையும். 29ம் தேதி வரை 3 நாட்கள் நடை சாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏடிஜிபி ஸ்ரீஜித் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* ஜனவரி 14ல் மகர ஜோதி
சபரிமலையில் ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர ஜோதி தரிசனமும், மகர விளக்கு பூஜையும் நடைபெறும். மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும் 30ம் தேதி முதல் பெருவழிப்பாதையில் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.