செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி ஓம்சக்தி நகரில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் வெற்றிவேலன் (48). செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் மெடிக்கல் கல்லூரியில் டெக்னீஷியனாக பணியாற்றுகிறார். அதே குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்துடன், வெற்றிவேலன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இருவரது குடும்பமும் பல இடங்களுக்கு ஒன்றாக செல்வது வழக்கம். அதை சாதகமாக்கிய வெற்றிவேலன், அந்த குடும்பத்தில் பிள்ஸ் 2 படிக்கும் மாணவியின் செல்போன் நம்பரை வாங்கியுள்ளார். சிறிது நாட்களிலேயே அவர், மாணவியின் செல்போன் நம்பருக்கு பாலியலை தூண்டும் விதமான ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து அனுப்பியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, செல்போன் பதிவுகளை தனது தந்தையிடம் காண்பித்துள்ளார். மாணவிக்கு வந்த வீடியோ பதிவுகளை வைத்து, மாணவியின் பெற்றோர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். அதில், பள்ளி மாணவிக்கு, வெற்றிவேலன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவரை பிடித்து, செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெற்றிவேலனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.