×

கிழக்கு கடற்கரை சாலையில் காலை 5-8 மணி வரை சைக்கிள் பயிற்சி செய்ய தற்காலிக ஒரு வழிப்பாதை

சென்னை: அடையாறு பகுதியில் காலையில் சைக்கிள் பயணம் மூலம் உடற்பயிற்சி மேற்கொள்வோர்களின் பாதுகாப்புக்காகவும், வாகனங்களின் வேகத்தால் பயமின்றி உடற்பயிற்சி மேற்கொள்ளவும், கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொள்வோருக்கான பாதுகாப்பான வழி அமைக்க, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்பேரில் காவல் உயர்அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து, கிழக்கு கடற்கரை சாலையில், அக்கரை சந்திப்பு முதல் முட்டுக்காடு வரையிலான 12 கி,மீ. தூரம், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள தற்காலிக ஒருவழிப் பாதை அமைக்கும் பணி மேற்கொண்டனர்.

அதை தொடர்ந்து, நேற்று காலை இந்த பாதையில் சென்னை காவல் ஆயுதப்படை விளையாட்டு பிரிவை சேர்ந்த 40 போலீசார், 150 பொதுமக்களுடன், சைக்கிள் பயணம் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதே நேரத்தில், முட்டுக்காடு முதல் அக்கரை வரையிலான இதே வழித்தடத்தில், இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. அடையாறு துணை ஆணையர் மற்றும் போக்குவரத்து துணை ஆணையர் (தெற்கு) தலைமையில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் சைக்கிள் பயண சோதனை ஓட்டம் இனிதே முடிவடைந்தது.

இந்த சைக்கிள் பயணம் பாதுகாப்பானதாகவும், சிறந்த முறையில் நடந்ததாகவும் இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இன்று காலை இதே வழித்தடத்தில் மீண்டும் சைக்கிள் பயண சோதனை ஓட்டம் நடைபெறும்.
இனி ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 5 மணி முதல் 8 மணி வரையில், அக்கரை முதல் முட்டுக்காடு வரையில் சைக்கிள் பயணத்திற்கான தற்காலிக ஒரு வழி பாதை அமல்படுத்தப்படும், என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : East Coast Road , A temporary lane for cycling training on the East Coast Road from 5-8 p.m.
× RELATED சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்