மதுரை: ஒன்றிய அரசின் மென்மையான போக்கினாலேயே இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் 2 நாட்கள் நடைபெறும் வர்த்தக கண்காட்சியை ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய எம்.பி. நவாஸ் கனி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்களை மீட்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
தமிழ்நாடு மீனவர்கள் நலனை பொறுத்தவரையில் ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்துக்கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்றார். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழ்நாடு மீனவர்களின் உரிமை நிலைநாட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.