திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சுவாமி தரிசனம் செய்தார். இதையொட்டி நேற்று திருப்பதிக்கு வந்த எடப்பாடி திருமலையில் உள்ள ஆதிவராக சுவாமி கோயில், ஹயக்ரீவர் கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து இரவு திருமலையில் தங்கிய எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தனர். இதனையடுத்து ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் சுவாமி சன்னதியில் சாமி தரிசனம் செய்து அகிலாண்டம் அருகே தேங்காயை உடைத்து வழிபட்டார். பின்னர் சிறிதுநேர ஓய்வுக்கு பிறகு புறப்பட்டு சென்றார்.