திருவனந்தபுரம்:சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்திபெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. இந்நிலையில், 41 நாள் நீண்ட மண்டல காலம், நாளை பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட தங்க அங்கி, நேற்று மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. நாளை பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது.
இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். நண்பகல் 12.15 மணியளவில் மண்டல பூஜை நடைபெறும். பிறகு கோயில் நடை சாத்தப்படும். மாலை 4 மணியளவில் மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். நாளையுடன் 41 நாள் நீண்ட மண்டல காலம் நிறைவடையும். இதன் பிறகு 29ம் தேதி வரை 3 நாட்கள் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். ஜனவரி 14ம் தேதி பிரசித்தி பெற்ற மகர ஜோதி தரிசனமும், மகர விளக்கு பூஜையும் நடைபெறும். மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.