×

வீடு வீடாக ஒட்டகத்தில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் ராஜஸ்தான் பெண் சுகாதார பணியாளர்: குவியும் பாராட்டுக்கள்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சுகாதார பணியாளர் ஒருவர் ஒட்டகத்தில் பல கிலோ மீட்டர் தூரம் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ஒமிக்ரான் தொற்று பரவி வரும் சூழலில் இதுவரை தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து போடும் வகையில், கிராமம், கிராமமாக, வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில், பார்மர் பகுதியில் பெண் சுகாதார பணியாளர் ஒருவர் ஒட்டகத்தில் தடுப்பு மருந்து பெட்டியை எடுத்து சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

தன்னை அழைத்துச் சென்ற ஒட்டக சாவரி தொழிலாளிக்கும் தடுப்பூசி போட்டு அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா இந்த படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஒட்டகத்தில் சென்றாவது கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற ராஜஸ்தான் பெண் சுகாதார பணியாளரின் முயற்சிக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோவிட்க்கு எதிராக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவதற்காக இந்த ஆண்டு நவம்பரில் “ஹர் கர் தஸ்தக்” தடுப்பூசி இயக்கம் மையத்தால் தொடங்கப்பட்டது. டிசம்பர் 31ம் தேதி வரை இந்த ஓட்டம் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Rajasthan , Camel, corona vaccine, Rajasthan female health worker
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...