ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பள்ளி மாணவிகள் 13 பேருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பரமக்குடி அருகே பெருமாள் கோவில் அரசு உயர்நிலை பள்ளியில் சமீபத்தில் குழந்தைகள் நல மைய நடத்திய விழிப்புணர்வு முகாமில் பாலியல் தொந்தரவு குறித்து 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டது.இதனையடுத்து 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள் கணித ஆசிரியர் ஆல்பர்ட் வளவன் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜ் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், செல்போன் மூலம் தொல்லை கொடுப்பதாகவும் புகார் செய்தனர். தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் பள்ளியில் விசாரித்து விட்டு பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 2 ஆசிரியர்கள் மீதும் போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சமூக அறிவியல் ஆசிரியர் ராமராஜை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வளவனை போலீசார் தேடிவருகின்றனர்.