×

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 45 வயது கொடூர நபர் சிக்கினார்

திருவள்ளூர். டிச.24:  திருவள்ளூர் அடுத்த நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (45). இவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். அந்த பகுதியில் வசித்துவரும் 9ம் வகுப்பு மாணவி, முனுசாமியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவரது பிள்ளைகளுடன் விளையாடுவாளாம். இந்த நிலையில், மாணவி சில தினங்களாக எதிலும் ஆர்வம் இல்லாமலும் படிப்பிலும் அக்கறை இல்லாமலும் ஒருவித அச்சத்துடன் இருந்துள்ளார். இதை கவனித்த சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது சரியான பதிலை கூறவில்லை. இதையடுத்து சிறுமியை டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியதால் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சிறுமியிடம் தீவிரமாக விசாரித்தபோது இதற்கு காரணம் முனுசாமிதான் என்பது தெரியவந்தது. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். டிஎஸ்பிசந்திரதாசன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து முனுசாமியை கைது செய்தார். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தார்.

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய முதியவர் போக்சோவில் கைது
செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(58). இவர் மாதவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அன்புமணி(50). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.  இவரது வீட்டின் எதிரே, 13 வயது பள்ளி மாணவி வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பாஸ்கர்,   சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அச்சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து, அச்சிறுமியின் பெற்றோர் நேற்று முன்தினம் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில்,  போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாஸ்கரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் அச்சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாஸ்கரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் நேற்று அடைத்தனர். பேத்தி வயதில் உள்ள சிறுமியை முதியவர் ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Girl, cruel person, rape
× RELATED பாஜ – விசிக மோதல்: 2 பேர் மண்டை உடைப்பு