துபாய்: அமீரகத்தில் நடக்கும் யு19 ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, குவைத், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் யு19 அணிகள் பங்கேற்றுள்ளன. துபாயில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா யு19-அமீரகம் யு19 அணிகள் மோதின. டாஸ் வென்ற அமீரகம் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா 50ஒவரில் 5விக்கெட்களை இழந்து 282 ரன் குவித்தது. இந்திய அணியின் ஹர்னூர் சிங் 120, கேப்டன் யாஸ் துல் 63, ராஜ்வர்த்ன் ஆட்டமிழக்காமல் 48*, ரஷீத் 35ரன் விளாசினர். அமீரகம் தரப்பில் கேப்டன் அலிஷன் 2விக்கெட் எடுத்தார்.
தொடர்ந்து இமாலய இலக்கை துரத்திய அமீரகம் 34.3ஓவரில் 128ரன்னில் அடங்கியது. அந்த அணியில் கய் ஸ்மித் 45, சூர்யா சதீஷ் 21 ரன் எடுத்தனர். இந்திய தரப்பில் ராஜ்வர்தன் 3, சங்வான், விக்கி, டாம்பே ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். முதல் ஆட்டத்தில் அமீரகத்தை அடக்கிய இந்தியா தனது 2வது ஆட்டத்தில் நாளை பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் வெற்றி
மற்ற ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இலங்கை 274ரன் வித்தியாசத்தில் குவைத்தையும் வீழ்த்தின.