×

தமிழக அரசின் முக்கிய திட்டங்கள், செயல்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையில் முதலமைச்சர் தகவல் பலகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு அரசினுடைய முக்கிய திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த `முதலமைச்சர் தகவல் பலகை’யை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி நடைபெற்ற அனைத்து துறை செயலாளர்களுடனான ஆய்வு கூட்டத்தில், அனைத்து துறைகளின் திட்டங்களை செயல்படுத்தப்படுவது குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளும் விதமாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் “ஆன்லைன் தகவல் பலகை” ஒன்றை ஏற்படுத்தி, அதன்மூலம் முக்கிய தகவல்களை தினமும் பார்வையிட்டு, அரசு அளித்துள்ள வாக்குறுதிகள், வெளியிட்டுள்ள அறிவிப்புகள், அரசின் முக்கிய செயல் திட்டங்கள் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு என தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்லாட்சியை வழங்கிடும் வகையில் அனைத்து தகவல்களும் “தகவல் பலகையில்” இடம்பெறும். அந்த தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.  அதன்படி, நிகழ் நேர தகவல், முறையான கண்காணிப்பு, அரசின் செயல்திறன் அதிகரிப்பு, தாமதங்களை குறைத்தல் மற்றும் உடனடி முடிவுகள் எடுத்தல் ஆகியவற்றின் தேவையை உணர்ந்து, தகவல் பலகையை உருவாக்கிட தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர் டேவிதார் (ஐஏஎஸ் ஓய்வு) தலைமையில் குழு அமைக்கப்பட்டது.  

இந்த முதலமைச்சர் தகவல் பலகையில்,  
* மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய நீர் தேக்கங்களின் கொள்ளளவு மற்றும் இதுநாள் வரையிலான நீர் இருப்பின் நிலை.
* மழை பொழிவு முறை.
* 25க்கும் மேற்பட்ட உணவு தானியங்கள்/காய்கறிகள்/பழங்கள் ஆகியவற்றின் விலை நிலவரம் மற்றும் திடீர் விலை உயர்வின் சாத்திய கூறுகளை கண்காணித்து, தீர்வு காண உதவும் விலை தளம்.
* வேலைவாய்ப்பு களநிலவரங்களை கொண்டு தற்போதைய பொருளாதார நிலையை கண்டறிதல்.
* நுகர்பொருள் வாணிப தகவல்.
* “முதலமைச்சர் உதவி மையம்” மற்றும் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” வாயிலாக பெறப்பட்ட மனுக்களின் தற்போதைய நிலை மற்றும் தீர்வுகள் குறித்த முழு தகவல்கள்.
* முதலமைச்சரால் கண்காணிக்கப்படும் பல்வேறு சுகாதார திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள்.
* மாநிலத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள், அவற்றில் அதிக கவனம் தேவைப்படும் மாவட்டங்கள், குறித்த காவல் துறையின் தினசரி அறிக்கைகள்.
* நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை மக்களுக்கான வீட்டு வசதி திட்டங்களின் நிலை.
* குடிநீர் வழங்கல் திட்டங்கள் - குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் குறித்த தகவல்கள்.
இவை அனைத்தும் தகவல் பலகையின் முதல் தொகுப்பில் அடங்குகின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்த முழுமையான தகவல்களை அறிந்து, அவற்றை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் விதத்தில் வாரந்தோறும் கூடுதல் தகவல்கள் இப்பலகையில் சேர்க்கப்படும். தகவல் பலகைகளின் நோக்கத்தை விளக்கும் காணொலி வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தலைமை செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமை முதல்வர் மு.க.ஸ்டாலின்: தேசிய உழவர் நாள் வாழ்த்து
தேசிய உழவர் நாளை முன்னிட்டு ‘உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமை’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட தேசிய உழவர் நாள் வாழ்த்து செய்தி: உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர். உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்! உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Minister's Information Board ,Chief Minister ,MK Stalin ,Government of Tamil Nadu , Chief Minister's Information Board: Chief Minister MK Stalin opened to know the important projects and activities of the Government of Tamil Nadu
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...