வேலூர்: வேலூரில் இன்று பிற்பகல் 3.14 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வேலூரில் இருந்து 50 கி.மீ மேற்கு வடமேற்கில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியதிர்வு மையம் அறிவித்துள்ளது. வேலூரில் நில அதிர்வு ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்துடன் வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் வேலூரிலும் உணரப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே கடந்த மாதம் 29-ஆம் தேதியும் இதேபோன்றதொரு நில அதிர்வை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவும் குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.