×

அயோத்தியில் பாஜகவினர் நிலங்களை வாங்கியதற்கு எதிர்ப்பு: பெரிய ஊழல் நடந்துள்ளதாக பிரியங்கா குற்றச்சாட்டு

உத்திரப்பிரதேசம்: அயோத்தியில் பாரதிய ஜனதாவினர் பலநூறு ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். அயோத்தியில் நிலம் வாங்கியது தொடர்பான ஊழலை உத்திரபிரதேச அரசே விசாரிப்பதாக கூறுவது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று பிரியங்கா காந்தி விமர்ச்சித்துள்ளார். மாவட்ட அதிகாரிகள் மட்டத்திலான விசாரணை நடத்துவதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ராமர் கோவில் அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டது.

எனவே, இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். நாட்டிலுள்ள எல்லா வீடுகளும் ராமர் கோவில் கட்ட நன்கொடை வழங்கினார்கள் என்று கூறிய பிரியங்கா காந்தி யாரும் விலைக்கு வாங்க முடியாத தலித்துகளின் நிலங்கள் அபகரிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மிகக் குறைந்த விலைக்கு நிலங்கள் வாங்கப்பட்டு ராமர் கோவில் அறக்கட்டளைக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும், இது மிகப்பெரிய ஊழல் என்றும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி கூறியுள்ளார். உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவாதியும் கேட்டுக்கொண்டுள்ளார்.       


Tags : BJP ,Ayodhya ,Priyanka , Ayodhya, BJP, land, big corruption, Priyanka accused
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு