×

திருச்சி அருகே டீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து: 5 வீடுகள் சேதம்..ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை..!!

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள தீக்கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். காந்தி மார்க்கெட் நுழைவு வாயிலில் உள்ள டீ கடையில், வடை சுட்டுக் கொண்டிருந்த போது திடீரென சிலிண்டர் வெடித்துள்ளது. இதைக்கண்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் டீக்கடையில் டீ அருந்திக் கொண்டிருந்த மாநகராட்சி பெண் ஊழியர், வடை சுட்டுக்கொண்டிருந்தவர் ஆகிய 2 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். மேலும் மளமளவென பரவிய தீ, செல்போன் ரீசார்ஜ் கடை உள்ளிட்ட அடுத்தடுத்து இருந்த 5 கடைகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்து விரைந்து சென்ற திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு படை வீரர்கள், தீ மேலும் பரவாமல் சுமார் 1 மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் கடையில் வைக்கப்பட்டிருந்த மேசை, நாற்காலிகள், மின் சாதனங்கள் உள்ளிட்ட சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. விபத்துக்கான காரணம் குறித்து காந்தி மார்க்கெட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டது. இதனால் இன்று காலை காந்தி மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tirichi , Trichy, tea shop, cylinder, accident
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...