திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனுக்கு மண்டலபூஜையின் போது அணிவிப்பதற்கான தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது. மண்டல மகர விளக்குப் பூஜைக்காக நவம்பர் 15 ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த முறையை போலன்றி தற்போது அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் சிறப்பு பூஜைக்காக ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் காலை புறப்பட்டது.
தங்க அங்கி ஊர்வலம் வரும் 25 ஆம் தேதி நண்பகல் 1.30 மணி அளவில் பம்பையை சென்றடையும். அங்கிருந்து தங்க அங்கியை தலைச்சுமையாக சுமந்து சந்நிதானத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கு 18 ஆம் படி வழியே எடுத்துச் செல்லப்படும் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடைபெறும். 26 ஆம் தேதி பிற்பகலில் மண்டலபூஜை முடிந்ததும் கோவில் நடை அடைக்கப்படும். இதையடுத்து மகர விளக்குப் பூஜைக்காக வரும் 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது.