சேந்தமங்கலம் : எருமப்பட்டி அருகே, கலெக்டர் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.எருமப்பட்டி ஒன்றியம் அலங்காநத்தம் ஊராட்சி, கெஜகோம்பையில் புறம்போக்கு நிலம் உள்ளது. அங்கு, 20க்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருந்தன.
அப்பகுதியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கரும்பு அறுவடை நடைபெற்று வருகிறது. இதற்காக லாரி சென்றுவர ஏதுவாக புறம்போக்கு நிலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் காமராஜ், ஆண்டி, அசோக் ஆகியோர் தடம் அமைக்க பொக்லைன் மூலம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட பனை மரங்களை அரசு அனுமதியின்றி அடியோடு வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். தாசில்தார் சுரேஷ், எருமப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், கலெக்டரின் அனுமதி இன்றி பனைமரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.