பணகுடி: பணகுடி அருகேயுள்ள அன்னாத்திகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (39). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்ட நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கனவே முதல் கணவரை இழந்து வாழ்ந்து வந்த அமுதா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். அமுதாவிற்கு 1 மகன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
குடும்பச் சூழல் காரணமாக கணவன், மனைவி இருவரும் பணகுடியிலுள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் அங்கு பணி புரிந்து வந்த மற்றொரு நபருடன் அமுதாவிற்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த மாரியப்பன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனை அமுதா கண்டு கொள்ளாமல் அந்த நபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மாரியப்பன் நேற்று காலை தன்னுடன் பணிக்கு வருமாறு அமுதாவை அழைத்துச் சென்றுள்ளார். அன்னாத்திகுளத்தின் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் சென்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அமுதாவை சரமாரியாக குத்தினார்.
இதில் நிலை குலைந்த அமுதா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். பின்னர் மாரியப்பன் பணகுடி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.தகவலறிந்து பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக பணகுடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார், மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.