சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சைவ அர்ச்சகர்கள் பயிற்சி பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: மானியக்கோரிக்கையின்போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத்துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி சைவ அர்ச்சகர் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வழங்கும் பொருட்டு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெற உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தமிழில் முதுநிலை பட்டமும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும். இந்து சமய இலக்கியங்களிலும் தமிழக கோயில்கள் வரலாற்றிலும் போதிய கற்றறிவு பெற்றிருத்தல் வேண்டும். பல்கலைக்கழகம், மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏதேனும் ஒன்றில் தமிழாசிரியராக குறைந்தபட்சம் 5 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
தலைமை ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம், ஆகம ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் 1.1.2022 அன்று 35 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும். இந்து சமயத்தவராகவும் பின்பற்றுபவராகவும், சைவ சமயக் கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்ப படிவம் கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது http://annamalaiyar.hrce.tn.gov.in என்ற கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.1.2022, இணை ஆணையர், அருணாச்சலேஸ்வரர் கோயில், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.