சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நேற்று கொரோனா பாதிப்பு ஏதும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1 லட்சத்து 342 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 602 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அந்தவகையில், கொரோனாவிற்கு சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கை 7,078 ஆக உள்ளது. நேற்று கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 691 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,97,244 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அரசு மருத்துவமனைகளில் 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று 132 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கோவையில் 95 பேருக்கும், செங்கல்பட்டு 42, ஈரோடு 50, திருப்பூர் 44, சேலம் 34, நாமக்கல் 32 பேருக்கும் அதிகபட்ச தொற்று காணப்பட்டது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் நேற்று ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை. சென்னையில் நேற்று உயிரிழப்பு ஏற்படவில்லை. கோவையில் 2 பேர், ஈரோடு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனாவிற்கு உயிரிழந்தனர். 34 மாவட்டங்களில் உயிரிழப்பு பதிவாகவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.