இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கானின் அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக ஷிப்லி பராஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள கோட் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம கும்பல் ஒன்று அவரது காரை சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் ஷிப்லி பராஸ் காயங்கள் இன்றி நூலிழையில் உயிர் தப்பினார்.
அதே சமயம் இந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது கார் டிரைவர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமைச்சர் ஷிப்லி பராஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எனது கார் ஓட்டுநருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று கூறியுள்ளார்.