×

கோவில் சொத்துக்களை சட்டப்படியான உரிமை இல்லாமல் அனுபவித்து வரும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

சென்னை; திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை சட்டப்படியான உரிமை இல்லாமல் அனுபவித்து வரும் நபர்களை திருக்கோயில் அலுவலர்கள் கண்டறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு விரைந்து ஆக்கிரமிப்புதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கெள்ள வேண்டுமென அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் பல்வேறு திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதுவரை ரூ. 1600 கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு இந்நிலங்களில் அளவிடும் பணிகள் நடைபெற்று HRCE என்ற எல்லைக்கல் ஊண்டி கம்பிவேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் சட்டபூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமில்லாமலும், உரிய வாடகையினை செலுத்தாமலும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையர் எழுத்து மூலமான புகாரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஒவ்வொரு முறையும் ஆணையர் மட்டுமே புகார் செய்து நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகும் என்பதால், எந்தவொரு தனிநபரும் ஆக்கிரமிப்பாளர் மீது எழுத்துபூர்வமான புகாரினை சம்பந்தபட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு அளிக்கும் வகையில் அதன் மீது நடவடிக்கை எடுக்க உரிய சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்களில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமின்றியும், உரிய வாடகை தொகையை செலுத்தாமலும், ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கெள்ள தொடர்புடைய காவல் நிலையத்தில் முறையான புகார் மனு அளித்திட சம்பந்தப்பட்ட திருக்கோயில் அறங்காவலர்கள் அல்லது தக்கார், செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி குற்ற நிகழ்வு குறித்து அறிந்த எந்த ஒரு நபரும் புகார் மனு அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களை சட்டப்படியான உரிமை இல்லாமல் அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து திருக்கோயில் நிர்வாகிகள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு விரைந்து ஆக்கிரமிப்புதாரர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், ஆக்கிரமிப்புதாரர்களுக்கு எதிரான தனிநபர்களால் காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகார் மனு மீதான விசாரணைக்கு தேவையான ஆவணங்களையும் முழுமையான ஒத்துழைப்பையும் காவல்துறைக்கு வழங்கிட வேண்டுமென திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


Tags : Minister ,Sekarbabu , Criminal action against persons enjoying temple property without legal rights: Minister Sekarbabu
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய...