திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து கடந்த 4ம் தேதி பகல்பத்து உற்சவ விழா துவங்கியது. இதன் நிறைவு நாளான 13ம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார். 14ம் தேதி பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. தினமும் மாலை நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். நேற்று திருக்கைத்தல சேவை நடந்தது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக இன்று (21ம் தேதி) திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி மாலை 5 மணிக்கு நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து குதிரை வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. 5.30 மணி முதல் 6 மணி வரை வையாளி வகையறா கண்டருளல் நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்துக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறும். இரவு 11 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு நாளை அதிகாலை 12.15 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார். ராப்பத்து நிறைவு நாளான 23ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. 24ம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இன்று பரமபதவாசல் திறப்பு கிடையாது.