×

500 கோடி பட்ஜெட்டில் ‘பெண் சூப்பர் ஹீரோ’ படம்: நடிகை ஜாக்குலினை வலையில் வீழ்த்திய சுகேஷ்

புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயற்சிக்கப்பட்ட வழக்கில் கைதானவர் சுகேஷ். இவர் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. இவரும் இவரது மனைவியும் நடிகையுமான லீனா மரியா பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, டெல்லி ரோகிணி சிறையில் அடைக்கப்பட்ட சுகேஷ், சிறையில் இருந்தபடியே செல்போன் மூலமாக தொழிலதிபர்களை மிரட்டி 200 கோடி பணம் பறித்துள்ளார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்கிறது.இந்த விசாரணையில் சுகேஷ், பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்ணான்டஸ், நோரா ஆகியோருக்கு பல கோடி விலை மதிப்புள்ள பொருட்களை பரிசாக தந்தது தெரியவந்தது.

நடிகை ஜாக்குலினை நேரில் சந்தித்த சுகேஷ், அவரை தனது காதல் வலையில் வீழ்த்த பல பொய்களை அள்ளிவிட்டுள்ளார். ஜாக்குலின் திறமையான நடிகை என்றும் அவரை வைத்து 500 கோடி பட்ஜெட் இந்தியாவின் முதல் ‘பெண் சூப்பர்ஹீரோ’ திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் சுகேஷ் கூறி உள்ளார். ஜாக்குலின், ஹாலிவுட் பட நடிகை ஏஞ்சலினா ஜோலியை ஒத்திருப்பதாக கூறியிருக்கும் சுகேஷ், தனது திரைப்பட புராஜெக்ட்டுக்காக திட்டமிட்டு வைத்திருக்கும் வரவு, செலவு கணக்குகளையும் காண்பித்துள்ளார். இதையெல்லாம் பார்த்ததும் சுகேஷை, ஜாக்குலின் உண்மையிலேயே நம்பியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags : Sukesh ,Jacqueline , Actress Jacqueline
× RELATED இரட்டை இலை சின்னம், பணமோசடி வழக்கில்...