×

ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு மாஜி அரசு ஊழியர் சிக்கினார்: 11 பைக்குகள் பறிமுதல்

ஆவடி: ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய மாஜி அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 11 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடுபோய் வந்தன. இதுகுறித்து பொதுமக்கள் ஆவடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதனையடுத்து ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி உத்தரவின்பேரில் ஆவடி போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. மேலும், இருசக்கர வாகனங்கள் திருடுபோன இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் தனிப்படை அமைத்து மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை, பருத்திப்பட்டு செக்போஸ்டில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகமாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை போலீசார் மடக்கி விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரிடம் அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார். இதனையடுத்து, போலீசார் அவரிடம் பைக்கிற்கு உரிய ஆவணங்களை கேட்டனர். அப்போது, அவரிடம் அதற்கு உரிய ஆவணமும் எதுவும்  இல்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை ஆவடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர் வேலூர் அருகே குடியாத்தம், கலாபுதூர் கிராமத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வன்(38) என்பது தெரியவந்தது. மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவமும் இவர் தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், விசாரணையில் அவர் ஆவடி, பூந்தமல்லி, மாதவரம், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் முன்பு நிறுத்தி வைத்திருந்த பைக், மொபட்டுகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

மேலும், தமிழ்செல்வன் வேலூர் மாவட்டத்தில் அரசு துறையில் ஊழியராக பணியாற்றியவர் என்பதும், இவரை துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்ததும், இவர் மீது 12க்கும் மேற்பட்ட திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும், இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 11 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Avadi , Avadi, theft of vehicles
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...