சென்னை: அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கழக(ஏஐசிடிஇ) ஆசிரியர் பயிற்சி திட்டத்தின்போது, சிறந்து கல்வி நிறுவனமாக ஏஐசிடிஇ 2வது முறையாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் ஏஐசிடிஇ தலைவர் அனில் தத்தாத்ரேய சகஸ்ரபுத்தே கேள்விகளுக்கு பதிலளித்து பேசியவற்றில் சில முக்கிய விவரங்கள்: பொறியியல் கல்லூரிகள் தொடர்பாக வல்லுநர் குழு சமர்ப்பித்த பரிந்துரையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க கூடாது என்று தெரிவித்துள்ளது. உண்மையில் அதற்கான தேவை ஏற்படவில்லை என்று சொல்லலாம். இதைத் தான் வல்லுநர் குழுவும் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 50% இடங்கள் காலியாகவே உள்ளன.
பெரும்பாலான கல்லூரிகளில் அடிப்படை வசதிகள், வளங்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இதன் பொருள். அப்படி இருக்கும்போது ஏன் புதிய பொறியியல் கல்லூரிகளில் முதலீடு செய்வது சரியாக இருக்காது.
பொறியியல் கல்லூரிகளில் தேவைக்கு அதிகமாக இடங்கள் இருப்பதால் என்ன பிரச்னை என்றால், மாணவர்கள் மூலம் பெறப்படும் கல்விக் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. அது கல்வி நிறுவனங்களின் வளங்களை பாதிக்கும், கல்வியின் தரம் பாதிக்கும். இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் வல்லுநர் குழு, 2024 வரை புதிய கல்லூரிகளை தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.
தொழில் கல்வியை 6ம் வகுப்பு முதல் தர முடியும். இது பெரிய அளவில் செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்று. அதற்கான பாடத்திட்டம் உருவாக்க வேண்டும், அதற்குரிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி அளவில் மாணவர்களுக்கு கணினிகள் மூலம் செயற்கை புலனறிவு உள்ளிட்ட பாடங்களை நடத்தலாம். பல்வேறு பல்கலைக் கழகங்கள் விருப்பத் தேர்வு(choice-based credit) முறை வேண்டும் என்று கேட்டு வருகின்றன. அது தொடர்பான மசோதாவையும் வரும் அகடமிக் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டு வருகின்றன. விரைவில், விருப்பத் தேர்வு மசோதா அல்லது கொள்கை அனைத்து பல்கலைக் கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் காலியாகவே உள்ளன.