குன்னூர்: நீலகிரி மாவட்டம் 65 சதவிகிதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டம். குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையால் பசுமை திரும்பியுள்ளது. இதனால், யானைகளுக்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் எளிதில் கிடைக்கிறது. இந்த நிலையில், யானைகள் சமவெளி பகுதியில் இருந்து குன்னூர் கே.என்.ஆர் பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. தற்போது ஒற்றை யானை மரப்பாலம் மற்றும் கே.என்.ஆர். பகுதியில் முகாமிட்டுள்ளது. இவ்வாறு வரக்கூடிய யானைகள் சாலையில் சாதாரணமாக உலா வருகின்றன. அந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி யானை கூட்டத்தை பார்த்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இதனால், யானை கோபம் அடைந்து வாகனங்களை தாக்கும் சூழல் நிலவி வருகிறது. எனவே, வனத்துறையினர் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் யானை அருகே சென்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுக்க கூடாது என்றும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கவனமாக செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.