சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகள் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக நிகழ்ந்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர் வலிமையான முதல்வர் மு.க.ஸ்டாலின் என கூறி தனது உரையை தொடங்கினார். இதுகுறித்து ஆளுநர் பேசியதாவது; வலிமையான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே...கொரோனா காலகட்டத்தில் நாம் மிகவும் பாதிக்கப்பட்டோம். உலகமே கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த சமயத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருந்ததற்காக பாராட்டுகிறேன், முதலமைச்சர் தலைமையில் மருத்துவ சேவைகளும், மருத்துவ கட்டமைப்பு வசதிகளும் நன்றாக ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பானதாக உள்ளது. இதில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.