மாட்ரிட்: 26வது உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் உள்ள வெல்வா நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூவுடன் மோதினார். இதில் கியான் யூ 21-15, 22-20 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி பட்டம் வென்றார். 2வது இடம் பிடித்த காந்திற்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். மகளிர் ஒற்றையரில் ஜப்பானின் அகனே யமகுச்சி. 21-14, 21-11 என்ற செட் கணக்கில், நம்பர் ஒன் வீராங்கனையான தைவானின் சூ யிங்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார். வெள்ளி வென்ற ஸ்ரீகாந்த் கூறுகையில், சில போட்டிகளில், நான் நன்றாக விளையாடினேன்.
சில போட்டிகளில் என்னால் இந்த ஆண்டு சிறப்பாக விளையாட முடியவில்லை, ஆனால் ஒரு உலக சாம்பியன் ஷிப்பின் இறுதிப் போட்டியை எட்டுவது சிறப்பானது. இன்று என்னால் வெற்றிபெற முடியவில்லை. லோ நன்றாக விளையாடினார். நான் மிகவும் கடினமாக உழைத்தேன், பதக்கம் வென்றதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் தொடர்ந்து கடினமாக உழைக்க முயற்சிப்பேன். அடுத்த ஆண்டு காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் போன்ற பல போட்டிகள் உள்ளன, அதற்காக இன்னும் கடினமாக உழைப்பேன், என்றார். அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய வீரர் லக்ஷயா சென், டென்மார்க்கின் ஆண்டர்சன் ஆகியோருக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது. இதனிடையே பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.