ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் தொடர்ந்து பெய்த கன மழையில் மலைச்சாலையில் சரிந்து விழுந்த ராட்சத பாறைகள் வெடிவைத்து அகற்றப்பட்டது.ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த கனமழையால் மலையில் இருந்து சரிந்து மலை சாலைகளில் ஆங்காங்கே ராட்சத பாறைகள் விழுந்து கிடந்தது. இதனால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் இருந்த ராட்சத பாறைகள் சாலையோரத்தில் நகர்த்தப்பட்டது. இதனால் போக்குவரத்தில் இருந்து சற்று பாதிப்பு தவிர்க்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் தொகுதி எம்எல்ஏ க.தேவராஜி நடவடிக்கையால் ராட்சத பாறைகள் வெடிவைத்து அகற்றும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் முழுவதுமாக ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு முழுவதுமாக சாலையோரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாதவாறு கற்களை அப்புறப்படுத்தி நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி எடுக்கப்பட்ட பாறைகளில் கருப்பு வெள்ளை வண்ணமிட்டு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் மலைச்சாலைகளில் நேர் எதிர் வரும் வாகனங்கள் லாவகமாக கடந்து செல்ல சாலையை விரிவுபடுத்த வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலை ஓரங்களில் 5 அடி அகலத்திற்கு விரிவுபடுத்தி வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு சிரமமின்றி பயணம் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.