சென்னை: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தென்னிந்தியாவின் காசி எனப் போற்றப்படும் உலகப்புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு பல்வேறு பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. முக்கிய சிவாலயங்களுள் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு தாமிர சபையில் நடராஜர் எழுந்தருளினார். அங்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவாலங்காடு வடாரன்கேஸ்வர் கோவிலில் சாமிக்கு பால்,தேன், இளநீர், பஞ்சாமிர்தம் உட்பட 33 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு இடங்களில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல, கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில், தூத்துக்குடி சிவன் கோவில் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகின்றன. பிரசித்திபெற்ற சிதம்பர நடராஜர் கோவிலில் இன்று மாலை ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளதை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன.