டெல்லி: பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு மத்திய அரசு அனுப்பக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதைத்தொடர்ந்து அம்மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இம்மசோதாவுக்கு சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட், ஏஐஎம், ஐஎம் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
குழந்தை மற்றும் பெண் உரிமைகள் அமைப்பு சிலவும் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இம்மசோதாவிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதாலும், மிக முக்கியமான மசோதா என்பதாலும் அதை அவசர கதியில் நிறைவேற்றாமல் நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி அதன் ஒப்புதலை பெற அரசு யோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால தொடர் இன்னும் 3 நாட்களில் நிறைவடைய உள்ளதும் குறிப்பிடத்தக்கது.