கோவில்பட்டி: தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் காலிறுதியில் விளையாட தமிழக அணி தகுதி பெற்றது. எப் பிரிவில் தமிழ்நாடு - இமாச்சலப்பிரதேசம் நேற்று மோதின. இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தமிழகம் 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. தமிழகம் சார்பில் சதீஷ் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்த... அரவிந்த், மனோஜ்குமார், முத்துக்குமார் தலா ஒரு கோல் போட்டனர். ஆட்ட நாயகனாக தேர்வான தமிழக வீரர் அரவிந்துக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ் விருது வழங்கி கவுரவித்தார். மேற்கு ஒன்றிய செயலர் முருகேசன், மாவட்ட விவசாய தொழிலாளரணி துணை அமைப்பாளர் சண்முகராஜ் மற்றும் ஹாக்கி யூனிட் நிர்வாகிகள் பங்கேற்றனர்.