கொடைக்கானல்: மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கடந்த வாரங்களில் தொடர்மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் இருந்தது. மழை குறைந்ததை அடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. வார விடுமுறை தினமான நேற்று பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். கொடைக்கானலில் உள்ள அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் நிறைந்து இருந்தனர். தற்போது குளிர் சீசன் துவங்கியுள்ளது. கடும்குளிர் நிலவும் இந்த சீசனை அனுபவிப்பதற்கென்றே வெளிநாடுகள், வடமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தற்போதுதான் நடவு பணிகள் நடந்து கொண்டிருப்பதால் பூக்கள் இல்லாமல் உள்ளது. ஆண்டுதோறும் பூக்கக்கூடிய மலர்களை பூங்காவில் பயிரிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் மக்கள் கூறுகையில், ‘‘தொடர்மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த சீசன் ஜனவரி முழுக்க நீடிக்கும். மாலை நேரம் தொடங்கி குளிரின் தாக்கம் அதிகரிக்கும். முன்னிரவு நேரத்தில் கடுமையான பனி நிலவும்’’ என்றனர்.