×

குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம்: டிசம்பர் 22ல் சேவை துவங்கும்?

குன்னூர்: குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் பாதை ஆடர்லி அருகே கடந்த அக்டோபர் 23ம் தேதி  நிலச்சரிவு ஏற்பட்டு, பாறைகள் விழுந்ததால், மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதியும் மலை ரயில் இயக்கத்தை ரத்து செய்வதாக சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது நிலச்சரிவு, பாறைகள் விழுவது அதிகரித்துள்ளது. மீண்டும் கல்லார் அருகே பாறைகள், கற்கள் விழுந்ததால் தண்டவாளம் சேதம் ஏற்பட்டது. பாறைகளை அகற்றி தண்டவாளம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால், வரும் 21ம் தேதி வரை நீலகிரி மலை ரயில் ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 22ம் தேதி முதல் மலை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

Tags : Coonoor ,Mettupalayam , Coonoor, Mettupalayam, Mountain Train Test,
× RELATED நீலகிரி அதிமுக அலுவலகம், வேட்பாளர் காரில் சோதனை