சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: ஒரகடம் பகுதியில் தொழிலாளர்கள் சாலை மறியல் செய்துள்ளனர். அங்கும் அமைதிபடுத்த சிஐடியு சங்கத்தலைவர்கள் சென்றுள்ளனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர் தொழிலாளர்களை கண்மூடித்தனமாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இந்த அத்துமீறிய நடவடிக்கைகயை வன்மையாக கண்டிக்கிறோம்.
காவல்துறை கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட சிஐடியு நிர்வாகிகளையும், அதேபோல் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், சிஐடியு நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். அதே போல் அந்த பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா, அரசின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உறுதி செய்திட வேண்டும்.