×

சிறுவர்கள் ஆன்லைன் கேம் மூலம் பணம் இழப்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுரை

சென்னை: சென்னை தேனாம்பேட்டை முத்தையா தெரு சேர்ந்த நடராஜன்(49), இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு 17 வயது மற்றும் 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் வீட்டின் அருகில் வசிக்கும் தங்களது நண்பரான 15 வயது சிறுவனின் வீட்டிற்கு சென்று அடிக்கடி செல்போன் மூலம் பணம் செலவழித்து “Garena Free Fire” ஆன்லைன் கேம் விளையாடி வந்துள்ளனர். 15 வயது சிறுவனின் தாய், நடராஜனின் இரண்டு மகன்களை பயமுறுத்தி கடையிலிருந்த ரூ.8 லட்சத்தை சிறுக, சிறுக எடுத்து மேற்படி 15 வயது சிறுவனின் தாயாரிடம்  கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின் படி தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆன்லைன் மூலம் கேம் விளையாடும் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார். அதில், ஆன்லைன் விளையாட்டுகளில் சிறுவர்கள் பணம் இழப்பதை தவிர்க்க, தங்களது குழந்தைகள் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடுவதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். ஆன்லைன் கேம் விளையாட்டு குறித்து ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றும் நபர்களிடம் சிறுவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகளின் செயல்பாடுகளை உன்னிப்பாக கண்காணித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Police Commissioner ,Shankar Jiwal , Parents should keep an eye on boys losing money through online game: Police Commissioner Shankar Jiwal advises
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...