புதுடெல்லி: டெல்லி ரோகிணி நீதிமன்ற குண்டுவெடிப்பு வழக்கில் பக்கத்து வீட்டுக்காரரை கொலை செய்ய முயற்சித்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி போலீசாரால் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் கடந்த மாதம் 9ம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார். இந்நிலையில், இந்த வழக்கில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) மூத்த விஞ்ஞானி பாரத் பூஷண் கட்டாரியாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கட்டாரியாவிடம் நடத்திய விசாரணையில், வழக்கறிஞராக இருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொல்வதற்காக டிபன் பாக்ஸ் வெடிகுண்டை எடுத்து வந்து நீதிமன்ற அறையில் வைத்து சென்றதாக கூறினார். இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறுகையில், ``சம்பவ தினத்தன்று இரண்டு பைகளுடன் காலை 9.33 மணிக்கு நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த குற்றவாளி, ஒரு பையை நீதிமன்றத்தில் இருந்த அறைக்குள் வைத்து விட்டு, காலை 10.35 மணிக்கு வெளியேறி விட்டான்,’’ என்று தெரிவித்தார். ஆனால், ஒரே குடியிருப்பில் வசிக்கும் விஞ்ஞானியும், வக்கீலும் ஒருவர் மீது ஒருவர் ஏராளமான புகார் தெரிவித்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.