×

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம்: விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு

விழுப்புரம்: கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் பேசுகையில், ‘‘லஞ்ச ஒழிப்பு போலீசார் நேரடியாக இந்த துறைக்கு வந்ததில்லை, அவர்கள் இதற்கு முன்பு சட்டம் ஒழுங்கு போலீசில் பணியாற்றியவர்கள்தான். அப்போது அவர்கள் திருடர்களிடம் மாமூல் வாங்கியவர்கள்தான், இரண்டு வீடுகளை கட்டியவர்கள்தான், தற்போது நேர்மையாக இருப்பதுபோல் செயல்படுகிறார்கள். அவர்களின் சட்டையை கழற்றாமல் விட மாட்டோம் என்றார். மேலும், டிஜிபி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளையும் கடுமையாகத் திட்டிப் பேசினார். இது போலீசாரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலேயே சோதனையிடுவோம் என விழுப்புரத்தில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம் எனவும் கூறினார். சி.வி.சண்முகத்தின் இந்தப் பேச்சுக்கு சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதம்தான் ஆகிறது. கடந்த 10 வருடங்களாக அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. இவர் எந்த ஆட்சியில் இருந்த போலீசாரை தாக்கிப் பேசியுள்ளார் என்று தெரியவில்லை. ஒருவேளை அதிமுக ஆட்சியில் போலீசார் நடந்து கொண்ட விதத்தை சொல்கிறாரா என்றும் தெரியவில்லை. சி.வி.சண்முகத்தின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது என்றனர்.

Tags : Shaluppuram , Anti-Corruption Officer, T-shirt, stripped, ex-minister
× RELATED வேலூர் பாலாற்றில் நுரையுடன்...