ஈரோடு: அந்தியூர் அரசு மருத்துவமனையில் அமெரிக்க வாழ் தமிழ் சங்கத்தினர் நிதிஉதவியால் தொடங்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அந்த அமைப்பின் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனையை பர்கூர் மலைக்கிராம மக்கள் உள்பட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெருந்தொற்று காலகட்டத்தில் அந்தியூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து தலைமை மருத்துவர் கவிதா, ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய உபகரணங்கள் தேவை என பல்வேறு தன்னார்வ அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா தமிழ்சங்கத்தினர் இலவசமாக 25 லட்சம் ரூபாய் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய உபகரணங்களை வழங்கி இருக்கின்றனர். அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது கிராமப்புற மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று அமெரிக்க வாழ் தமிழ் சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் மாற்றப்படும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.