குன்னூர் : குன்னூரில் வருவாய் துறை சார்பில் ஆறுகள் மற்றும் ஓடைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சுத்திகரிக்க இதுவரை பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப் படவில்லை. இதனால், வீடுகள் மற்றும் மார்க்கெட் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் குன்னூரில் உள்ள சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் நேரடியாக கலந்து வருவதால் நீர் மாசடைந்து வருகிறது. இதேபோல், ஆறுகள் மற்றும் ஓடைகளை ஆக்கிரமித்து வீடு கட்டுவதால் மழை காலங்களில் வெள்ள நீர் செல்ல முடியாமல் சேதம் ஏற்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் ஆறுகள் பாதுகாப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், குன்னூரில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஆறுகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால், வருவாய் துறை சார்பில் ஆறுகள் கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியது.
இதில், குன்னூரில் மட்டும் ஆறுகள் மற்றும் ஓடைகளின் எண்ணிக்கை 719. இதனை முதற்கட்டமாக டிஜிட்டல் கருவிகள் மற்றும் வரைபடங்கள் வைத்து ஆய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற்றது.
இந்த ஆய்வு அறிக்கைகள் விரைவில் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மேலும், குன்னூர் மாடல் ஹவுஸ், ரேலி காம்பவுண்ட், டானிங்டன் பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் ஆற்றில் கட்டப்பட்டுள்ள கட்டிட பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.