சென்னை: தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதை தொடர்ந்து, வழக்கமாக நடைபெறும் நவம்பர் - டிசம்பர் மாத பருவத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. கடந்த 1 வருடத்திற்கும் மேலாக ஆன்லைனில் படித்ததாலும் மேலும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது குறுகிய காலம் என்பதால் செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது என மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து வழக்கமாக நடைபெறும் நவம்பர் - டிசம்பர் மாத பருவத்தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்றும், நேரடி தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு கூடுதலாக 20 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனவரி 21ம் தேதி முதல் இளநிலை மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் தொடங்கி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் கால அட்டவணைப்படி, பி.இ, இ.டெக், பி.ஆர்க் உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கு நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெற வேண்டிய பருவத்தேர்வுகள், ஜனவரி 21ம் தேதி தொடங்கி மார்ச் இறுதி வரையில் நடைபெறும்.
அதேபோல் எம்.இ, எம்.டெக் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு ஜனவரி 21ம் தேதி தொடங்கி பிப்ரவரி இறுதி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.