சென்னை: அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1,414 பத்திரிகையாளர் குடும்பங்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் தற்போது ரூ.72 ஆயிரம் ஆக உள்ளது. பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் வருமான உச்ச வரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையால் கடந்த 2012ம் ஆண்டில் 771 அங்கீகார அட்டைகளும், 643 செய்தியாளர் அட்டைகளும் புதுப்பித்து வழங்கப்பட்ட நிலையில் 1414 செய்தியாளர்களை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்குமாறு அத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் குடும்பங்களை தற்போதுள்ள ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் என்பதை எந்தவித உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக இணைத்து செயல்படுத்துவதற்கு உரிய அரசாணை வழங்குமாறு அரசினை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி சுகாதார திட்ட இயக்குநரின் கருத்துருவினை அரசு நன்கு பரிசீலினை செய்து அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1,414 பத்திரிகையாளர் குடும்பங்களை வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இணைக்கவும், மேலும் இனிவரும் ஒவ்வோர் ஆண்டும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்திதுறையிடமிருந்து செய்தியாளர்கள் பட்டியலை பெற்று சேர்க்கவும் முடிவு செய்து அரசாணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.