×

எந்தெந்த மாநகராட்சிகளில் பெண்களுக்கு மண்டல வாரியாக வார்டுகள் ஒதுக்கீடு?..தமிழக அரசு பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நாட்டின் எந்தெந்த மாநகராட்சிகளில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டுகள் ஒதுக்கப்படுகின்றன என்று தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும்,  ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக 84 இடங்கள்தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும்.

ஆனால், மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருகிறது. இந்நிலையில், மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் பார்த்திபன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி தேர்தல் தொடர்பான அரசின் நடவடிக்கைகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு, ெபாறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, பெண்களுக்கு 50 சதவீதத்திற்கும் மேல் இட ஒதுக்கீடு வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றார். அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், அரசியல் சட்டத்தின் 243 டி உட்பிரிவு 3ல் மூன்றில் ஒரு பகுதிக்கு குறையாமல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வார்டு எல்லை மறுவரையறை அடிப்படையில் மண்டல வாரியாக சுழற்சி முறையில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றார். அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் எஸ்.பிரபாகரன், வார்டு வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த காரணத்தையும் அரசு தெரிவிக்கவில்லை என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வார்டு வாரியாக இல்லாமல், மொத்தமாக மாநகராட்சியை ஒரு யூனிட்டாக கருதி ஏன் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது. மண்டல வாரியாக எந்தெந்த மாநிலங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்று அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Government of Tamil Nadu High Court , Corporation, Allocation, Government of Tamil Nadu, High Court
× RELATED கொரோனா போன்ற தொற்று நோய்களை...